ஜனவரி மாதம் 1-ம் தேதி* The Circumcision of Our Lord *விருத்தசேதனத் திருநாள்

LIVES OF SAINTS
அர்ச்சியசிஷ்டவர்களின் சரித்திரம்

ஒவ்வொரு தேதியிலும் வாசிக்க வேண்டிய அந்தந்த அர்ச்சியசிஷ்டவரின் சரித்திரம் சுருக்கமாய் கொடுக்கப்பட்டிருப்பதின் காரணம் யாதெனில், பலர் தங்களுக்கு வாசிக்கப் போதுமான நேரமில்லையென்று சொல்லி அதை வாசியாமல் விட்டுவிடக்கூடாதென்பதற்காகவே. நாலைந்து நிமிடங்கூட கிடைக்கப் பெறாமற் போகிறவர்கள் யாருமிரார். மேலும் அந்தந்த தேதியில் குறிக்கப்பட்டிருக்கின்ற யோசனையை விசுவாசிகள் தங்கள் மனதில் வைத்து, அதை அந்தந்த நாளில் அப்போதைக்கப்போது சிந்திப்பார்களேயானால், பெரிதும் ஞானப்பிரயோசனமடைவார்கள்.

ஜனவரி மாதம் 1-ம் தேதி
The Circumcision of Our Lord
விருத்தசேதனத் திருநாள்

திவ்விய பாலகனுக்கு விருத்தசேதன சடங்கு
நிறைவேற்றப்படுகிறது.

விருத்தசேதனமானது அபிரகாமுடைய சந்ததியை மற்ற ஜனங்களினின்று பிரித்துக் காட்டும் அடையாளச் சடங்கு. மோசஸ் பத்துக் கற்பனையைப் பெறுவதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே விருத்தசேதனச் சடங்கு சர்வேசுவரனால் ஏற்படுத்தப்பட்டது. இதை யூதர்கள் வெகு கண்டிப்பாய் அநுசரித்து வந்தார்கள். இச் சடங்கை நிறைவேற்றும் போது குழந்தையின் சரீரத்தில் கொஞ்சம் சதை அறுக்கப்படும். நமது திவ்விய கர்த்தர் இச் சடங்கை அநுசரிக்க கடமைப்படாவிடினும் தாம் எடுத்த சரீரம் மெய்யான மனித சரீரமென்று காட்டி, சகலரும் தேவ கட்டளைக்கு அமைந்து நடக்க வேண்டுமென்று நமக்கு படிப்பிக்கும் பொருட்டு, அவர் தமது மாசற்ற சரீரத்தில் காயப்பட்டு இரத்தம் சிந்த சித்தமானார். நாமும் நமதாண்டவருடைய திவ்விய மாதிரியைக் கண்டுபாவித்து, வேத கற்பனையையும், திருச்சபைக் கட்டளையையும் பக்தியோடு அநுசரிப்போமாக. மேலும் நமது இருதயத்தில் கிளம்பும் ஆசாபாசங்களையும், ஒழுங்கற்ற நாட்டங்களை ஒறுத்தலாகிய கத்தியால் அறுத்துக் காயப்படுத்தி, ஞானவிதமாக இரத்தம் சிந்தப் பழக வேண்டும். கண், காது, வாய் முதலிய ஐம்புலன்களை அடக்கி ஒறுப்பவன் பாவத்திற்கு உடன்பட மாட்டான். ஆகையால் இந்த ஒறுத்தல் முயற்சியை ஜெபத்தால் அடைவோமாக.

இந்தப் புது வருடத் துவக்கத்தில் நமது பழைய பாவ நடத்தையை வி;ட்டொழித்து, துர்ப் பழக்கங்களை மாற்றிவிட்டு, புது வாழ்க்கை வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளக்கடவோம்.

யோசனை
நாம் இந்தப் புதுவருடத்தில் எந்தெந்தப் பாவத்தை விட்டொழித்து, எந்தெந்தப் புண்ணியத்தைச் செய்ய தீர்மாணித்தோமோ, அதை இன்றே செய்ய முயற்சிப்போமாக.

Leave a comment